ஒரு கோடிக்கும் அதிகமான மரங்களை நட்டு வளர்க்கும் நோக்கத்துடன் ஆர்.கே.நாயர் என்ற மனிதர் நாடு முழுவதும் ஓடி நடக்கிறார். கேரளா காசர்கோடு பகுதியைச் சேர்ந்த நாயர் கடந்த 2022 புவி தினத்தில் மட்டும் 5,600 மரக் கன்றுகளை நட்டுள்ளார். குஜராத் ராஜ்கோட் ஜுனாகட் பகுதியில் ஆகாகான் நினைவிடத்தில் இவை நடப்பட்டுள்ளன.
மண் அள்ளும் இயந்திரத்தைப் பயன்படுத்தி பாறைகளை உடைத்து உருவாக்கப்பட்ட 12,000 சதுர அடி நிலத்தில் மியாவாக்கி மாதிரியில் மரங்கள் நடப்படுகின்றன. நான்கடி ஆழத்திற்கு பாறைகளை உடைத்து அதில் மேலிருந்து ஒன்றரை அடி மண் நிரப்பி நடும் இடம் தயார் செய்யப்படுகிறது. தென்னை நார்க் கழிவு, உமி, மண் புழு உரம், பசுவின் சிறுநீர் ஆகியவை மண்ணில் சேர்க்கப்படுகின்றன.
நாயர் குஜராத்தில் பிரபல தொழிலதிபர். இதுவரை பன்னிரண்டு மாநிலங்களில் 88,000 சிறிய வனங்களில் 16.5 இலட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். முதல் இரண்டு ஆண்டுகள் காலை மாலை இருவேளைகளிலும் கன்றுகளை நன்கு நனைப்பார். ஈரப்பசை நிலை நிற்க உலர்ந்த வைக்கோல் கொண்டு கன்றுகள் புதையிடப்படும்.
மூன்று ஆண்டுகள் ஆகும்போது வேர்கள் பாறைகளை நன்கு ஊடுருவி மண்ணில் ஆழமாக வேரூன்றியிருக்கும். வேலியும் நீரும் இல்லாமல் படம் எடுத்து விளம்பரம் செய்வதற்காக ஒரு மரம் கூட இதுவரை நாயர் நட்டு வளர்த்ததில்லை. தன் வழிகாட்டுதலில் நட்டவை பாதுகாப்புடன் வளர்கின்றனவா என்பதை உறுதி செய்வது இவரின் சிறப்புப் பண்பு.
பெரிய நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதியைப் பயன்படுத்தியே கன்றுகள் நடப்படுகின்றன. தாராப்பூரில் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான நான்கு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள குப்பைக்கிடங்கை வனப்பகுதியாக இவரின் தலைமையில் இயங்கும் என்விரோ கிரியேட்டர்ஸ் அறக்கட்டளை (Enviro Creaters Foundation) மாற்றியுள்ளது.